வருகிற 31 ஆம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் ஐ.பெரியசாமி

by Column Editor

வருகிற 31 ஆம் தேதிக்குள் தமிழகத்திலுள்ள 14 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில், பொது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 165 பயனாளிகளுக்கு நகைகள் மற்றும் அதற்கான சான்று வழங்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நகைகள் மற்றும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது. தி.மு.க அரசின் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் நகைகடன் தள்ளுபடி அறிவித்து, அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. பொது நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியான 14 லட்சத்து 40 ஆயிரம் பயனாளர்களுக்கு சுமார் 6 ஆயிரம் கோடி மதிப்பிலான பொது நகைகடன் தள்ளுபடி வரும் 31 ஆம் தேதிக்குள்ள செய்யப்பட்டு சான்றிதழ் மற்றும் நகைகள் திரும்ப வழங்கப்படும். கடன் தள்ளுபடி பெற தகுதி உள்ள நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கும் நகைகடன் தள்ளுபடி செய்யப்படும்.

நகைகடன் வழங்கப்பட்டது தொடர்பாக உரிய ஆவணங்களை சரிபார்த்து, சட்டப்படி கடன் வழங்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்துள்ளோம். நடத்தப்பட்ட ஆய்வில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ள நிலையில், சட்டத்தை மீறி முறைகேடாக, போலியான ஆவணம் மற்றும் நகைகள் கொண்டு நகைகடன் பெற்றவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Posts

Leave a Comment