சர்வதேச பெண்கள் தின வரலாறு தெரியுமா?

by Column Editor

பெண்கள் தினம் கொண்டாடப்படுவதற்கு பின்னால் அவர்களின் ரத்தம்தோய்ந்த போராட்டங்கள் நிரம்பியிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் பெண்களுக்கு வாழ்த்துகளை மட்டும் பரிமாறும் நாளாக இல்லாமல் இந்நாளில் அதன் போராட்டம் நிறைந்த வரலாற்றையும் சற்று திரும்பி பார்க்கலாம்.

ஆரம்பத்தில் சமூகத்தில் பெண்ணடிமைத்தனம் ஒன்று இருந்ததில்லை. அது பெண்களுக்கான அனைத்து உரிமைகளையும் உடைய தாய்வழிச்சமூகமாகவே இருந்தது. மெல்ல மெல்ல நிலவுடமைச்சமூக அமைப்பு உருவெடுத்தது. இதன் விளைவாக ஆண்களுக்கும் – பெண்களுக்கும் இடையில் வேலைப்பிரிவினை தோன்றியது. பெண்கள் வாரிசுகளுக்காகவும், குடும்ப அமைப்பிற்காகவும் மட்டும் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டது.

அடிப்படை உரிமைகளுக்காக வலுப்பெற்ற போராட்டம்:

18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நியூயார்க்கில் ஆயிரக்கணக்கான பெண்கள் ரஷ்யா, இத்தாலி, போலந்து போன்ற இடங்களிலிருந்து பணிக்காக குடிபெயர்ந்து வேலை செய்து வந்தனர். மணிக்கணக்கில் வேலை, குறைந்த ஊதியம் அவர்கள் பயன்படுத்தும் ஊசி, நூல் உட்காருவதற்கான நாற்காலி தொடங்கி அனைத்திற்க்கும் வரி கட்ட வேண்டும் என்ற அவல நிலை வேலையில் ஏற்படும் பாதிப்பு, கழிவறையை அதிக நேரம் பயன்படுத்துவதெற்கெல்லாம் அபராதத்தொகை வசூலிக்கப்பட்டது.

அந்நாட்களில் தொழிலாளர் போராட்டம் என்பது ஆண்களை மையப்படுத்தியே இருந்தது. பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக தாங்களே களம் காண முடிவு செய்தனர். 1820 முதன் முதலில் நியூ இங்கிலாந்து பகுதியில் தையல் நிறுவனப் பெண்கள் இணைந்து முதல் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இவற்றில் புகழ்பெற்றது மசாச்சூசெட்ஸில் உள்ள பருத்தி ஆலையில் நடைபெற்ற வேலைநிறுத்தம். வெறும் 3 டாலருக்கு 81 மணி நேர வேலை. அதிலும் ஒன்றேகால் ரூபாய் விடுதிக்கும், உணவிற்க்கும் எடுத்துகொள்வார்கள். இந்த பின்னணியில்தான் உழைக்கும் பெண்கள் சங்கம் உருவானது!

பெண்கள் தினமும் அதன் வரலாற்று பின்னணியும் :

இப்படியாக சங்கங்கள் வளரத்தொடங்கின. 1908 ஆம் ஆண்டு குறைந்த வேலை நேரம், உழைப்பிற்கேற்ற கூலி, முக்கியமாக வாக்குரிமை போன்ற அடிப்படையான கோரிக்கைகள் முன்வைத்து 15 ஆயிரம் பெண்கள் அணிதிரண்டு நியூயார்க் நகரத்தை ஸ்தம்பிக்கச் செய்தனர். போலீஸ் மற்றும் நிறுவனங்களின் கூலிப்படையால் கொடூராமாகத் தாக்கப்பட்டனர். இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்ட பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். அவர்கள் இலக்கு தெளிவாக இருந்தது. பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடியலை மனதில் ஏற்று வீறு நடைபோட்டனர். விளைவு? உழைக்கும் பெண்களைத்தாண்டி நடுத்தர, மேல்தட்டு வர்க்கப் பெண்களும் போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டதன் மூலம் போராட்டம் வலுப்பெற்றது.

பெண்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் இயக்கமாக மட்டும் இயங்காமல் சமூகத்தின் நிலவும் அவலங்களுக்கும் சேர்த்தே போராட துணிந்தனர். 1917-ம் ஆண்டு முதல் உலகப்போர் நடந்துகொண்டிருந்த நிலையில் ரஷ்யாவில் “போர் வேண்டாம்… அமைதியும் ,ரொட்டியும் தான் வேண்டும்” என்ற முழக்கத்துடன் மார்ச் 8 ந்தேதி பெண்கள் முன்னின்று போராட்டம் நடத்தினர். நான்கு நாட்கள் நீடித்த இந்த போராட்டம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரஷ்ய மன்னர் ஜாரின் முடியாட்சிக்கு முடிவெழுதியெதோடு பெண்களுக்கான வாக்குரிமையும் பெற்றுத்தந்தது.

இந்த போராட்டத்தின் வீரியம் சற்றும் குறையாமல் அடுத்த அடுத்த கட்டத்திற்க்கு எடுத்து சென்ற பெருமை பெண் போராளி கிளாரா ஜெட்கினைச் சேரும். அடிப்படையில் கம்யூனிஸவாதியான இவர் பெண்களின் அடிப்படை உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார். இருபத்தைந்து ஆண்டுகள் சமத்துவம் எனும் ஏட்டின் ஆசிரியையாகவும் இருந்த இவர்தான், பெண்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் வகையில் உழைக்கும் பெண்களின் இரண்டாவது சர்வதேச மாநாட்டில் பெண்கள் தினத்தை முன்மொழிந்தார். 17 நாடுகளில் இருந்து வந்த 100 பெண்களும் கிளாராவை வழிமொழிந்தனர்.

1975-ம் ஆண்டில்தான் மார்ச் 8-ஐ சர்வதேசப் பெண்கள் தினமாக முறைப்படி அறிவித்தது ஐ.நா. ஒவ்வொரு சர்வதேச பெண்கள் ஆண்டும் ஒவ்வொரு முழக்கத்தை முன்வைக்கும். அந்தவகையில் 111 வது சர்வதேச பெண்கள் ஆண்டு “நாளைய நிலையான மாற்றத்திற்காக இன்றே களையப்பட வேண்டிய பாலின பாகுபாடு“ என்ற என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளது.

இந்த வரலாற்று பின்னனியில் உருவான பெண்கள் தினம் வெறும் சலுகைகளுக்கும், போட்டிகளுக்கும் மட்டுமே அடையாளப்படுத்தாமல் இந்த சமூகம் அதன் பாகுபாட்டை களையும் வரை நீடிக்க வேண்டும் என்பது தான் இந்நாளின் நோக்கமாகும். அதுவே அந்த பெண் போராளிகளின் கனவாகவும் இருந்தது.

Related Posts

Leave a Comment