திருமணத்துக்கு ‘சரி’ என்று சொல்வதற்கு முன்பு இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்

by Lifestyle Editor

இன்றைய காலகட்டத்தில் திருமணம் செய்து கொள்வது என்று முடிவெடுப்பது மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது. திருமணம் என்பது ஒவ்வொரு நபரின் பார்வையிலும் ஒவ்வொரு விதமாகக் காணப்படும். அதே போல, அனுபவங்களும் மாறும். உங்கள் திருமண உறவு என்பது உங்கள் சகோதரி, நண்பர், ஏன் பெற்றோர் திருமண உறவைப் போல இருக்காது.

திருமணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா என்றே தற்போது பலரும் நினைத்து வருகின்றனர்! யாருடைய ஆலோசனையையும் கேட்கலாம், திருமண உறவை எப்படி சுமுகமாக கையாளலாம் என்பதை பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான கருத்தை தெரிவிப்பார்கள். திருமண உறவு வெற்றிகரமாக இருப்பது என்பது அந்த குறிப்பிட்ட தம்பதிகளிடம் தான் இருக்கிறது.ஆனால் திருமணம் செய்து கொள்ளலாம் என நீங்கள் முடிவு எடுக்கும் முன்பு இந்த ஐந்து விஷயங்களைப் பற்றி கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அடிக்கடி மன்னிப்பு கேட்க வேண்டும் : மன்னிப்பு என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் திருமண உறவில்தான் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். உண்மையாகவே உங்கள் மீது தவறு இருந்தால் நீங்கள் தயங்காமல் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும். அதற்கு மாறாக ஒருவர் மீது ஒருவர் மாற்றி மாற்றி குற்றம் சொல்லிக் கொண்டே இருந்தால் உறவு பெரிதாக பாதிக்கப்பட்டு விடும். மன்னிப்பு கேட்பது சின்ன சின்ன விஷயங்களை எளிதாக மறக்கச் செய்யும். பெரிய விஷயங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் உறவை பலமாக்கும். சில நேரங்களில் உங்கள் வாழ்க்கைத்துணை தவறு செய்திருந்தால் கூட நீங்கள் மன்னிப்பு கேட்பதில் எந்த தவறும் இல்லை.

திருமணம் என்பது பாதுகாப்பு மட்டுமல்ல : எதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது எதற்காக திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்ற கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் கூறுவார்கள். ஒரு சிலருக்கு வயதாகிறது, தனியாகவே இருக்கிறாய் எனவே பாதுகாப்புக்காகவாவது ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பலரும் தெரிவிப்பார்கள். ஆனால் திருமணம் என்பது பாதுகாப்புக்கானது மட்டுமே கிடையாது.

திருமணம் செய்து கொள்வது என்பது சாதனை அல்ல : திருமணத்தின் மீதான கண்ணோட்டம் பெரிய அளவு மாறி இருந்தாலும் இன்னும் பலர் திருமணம் செய்து கொள்வதை மிகப் பெரிய சாதனையாகவே கருதுகின்றார்கள். திருமணம் என்பது வாழ்வின் முக்கிய கட்டங்களில் மற்றும் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளில் ஒன்று, அவ்வளவுதான். நீங்கள் என்ன படிக்க வேண்டும் அல்லது எங்கு வேலை செய்ய வேண்டும் என்று எப்படி கவனமாகத் தேர்வு செய்கிறீர்களோ, அதேபோலத்தான் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற முடிவும் வாழ்க்கையின் ஒரு பகுதி. எனவே நீங்கள் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம். திருமணம் செய்து கொள்வதே மிகப்பெரிய சாதனை என்று எப்பொழுதுமே நினைக்கக் கூடாது.

பிரச்சனையில் இருந்து விலகி ஓட முடியாது : மற்ற விஷயங்களை போல் திருமண உறவில் பிரச்னை ஏற்பட்டால் அதில் இருந்து நீங்கள் விலகி ஓட முடியாது. எனவே பிரச்னைகளை தைரியமாக எதிர்கொண்டு தீர்வு காண வேண்டும்.

உங்கள் பார்ட்னர் பேசுவதை காது கொடுத்து கேட்க வேண்டும் : திருமண உறவு என்பது பரஸ்பர உறவு. நீங்கள் மட்டுமே பேசிக் கொண்டிருக்கக் கூடாது, உங்கள் பார்ட்னர் பேசுவதையும் நீங்கள் கேட்க வேண்டும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு கிவ் & டேக் பாலிசி என்பது போல உங்கள் பார்ட்னர் வருத்தங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ளும்போது அதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

Related Posts

Leave a Comment