பிப்ரவரி 1 முதல் 1ம் வகுப்பு முதல் 12 வரை அனைத்து மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு : அன்பில் மகேஷ்..

by Column Editor

தமிழகத்தில் 1 முதல் 12 ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் வரை பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. ஆன்லைன் வகுப்புகளே நடத்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறையத்தொடங்கியதை அடுத்து கடந்த நவம்பர் மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஓரளவிற்கு மாணவர்கள் தங்களை நேரடி வகுப்புகளுக்கு தயார்படுத்தி வந்த நிலையில், புதிய அச்சுறுத்தலாக ஒமைக்ரான் வைரஸ் வந்தது… அதோடு கொரோனா மூன்றாவது அலையும் பரவத் தொடங்கியது.

இதனையடுத்து ஜனவரி 5 ஆம் தேதி 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது. மேலும் 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் அவர்களுக்கும் பின்னர் ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டது. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த திருப்புதல் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை 4 நாட்களிக் (ஜனவரி 31 ) முடிவடையவுள்ள நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிவில் பிப்ரவரி 1 ம் தேதி முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்களின் அறிக்கை படியும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதியும், வீடுகளில் முடங்கியிருக்கும் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment