சென்னைவாசிகளே டேக் டைவர்சன்… இந்த 4 நாட்களில் போக்குவரத்து மாற்றம் – ப்ளான் பண்ணிக்கோங்க!

by Column Editor

குடியரசு தின விழா ஜனவரி 26ஆம் தேதி காலை காமராஜர் சாலையில், காந்தி சிலை அருகில் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஜனவரி 26 மற்றும் அணி வகுப்பு ஒத்திகை நடைபெறும் நாட்களான ஜனவரி 20, 22 மற்றும் 24 ஆம் தேதி ஆகிய 4 தினங்களுக்கு மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

4 நாட்களும் காமராஜர் சாலையில், கலங்கரை விளக்கம் முதல்போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும்வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே. மடம் சாலை, வி.கே. ஐயர்சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ்சந்திப்பு, சிவசாமி சாலை அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வேசெல்லும் பிற வாகனங்கள், சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும்கச்சேரி சாலை சந்திப்பில் கச்சேரி சாலை நோக்கி திருப்பப்படும். அவை கச்சேரி சாலை, லஸ், கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை, நீல்கிரிஸ் சந்திப்பு, மியூசிக் அகாடமி, ராயபேட்டை மருத்துவமனை, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் நடேசன் சாலை சந்திப்பில் டாக்டர் நடேசன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் அவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும்.

டாக்டர் பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும்வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பி விடப்படும்.

பாரதி சாலை மற்றும் பெல்ஸ்ரோடு சந்திப்பில் காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதி சாலை மற்றும் பெல்ஸ்ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி திருப்பி விடப்படும்.

வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் (மாநகர பேருந்து தவிர்த்து) பெல்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படும். மாநகர பேருந்துகள் கெனால் சாலை சந்திப்பு வரை அனுமதிக்கப்படும்.

பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் திருப்பி விடப்பட்டு ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக வாலாஜா பாயிண்ட், அண்ணா சாலை, அண்ணா சிலை, அண்ணா சாலை, ஜீ.பி. ரோடு, ராயபேட்டை மணிகூண்டு, நடேசன் சாலை, சாந்தோம் சாலை, வழியாக அடையாறு சென்றடையலாம்.

வாலாஜா பாயிண்ட் மற்றும் அண்ணா சாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் வர அனுமதியில்லை.

Related Posts

Leave a Comment