வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளவும், சீரான மின் விநியோகம் வழங்குதல் தொடர்பாக அமைச்சர் ஆய்வு …!!

by Lifestyle Editor

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குதல் மற்றும் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களிடையே காணொளி காட்சி வாயிலாக விரிவான ஆய்வினை மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை 21.10.2023 அன்று தொடங்கியதிலிருந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் வருகின்ற 06.11.2023 வரை கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்று (04.11.2023) சென்னை, தமிழ்நாடு மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., அனைத்து இயக்குனர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த மாவட்டங்களான கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்களான மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடனும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வினை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்கள் அனைவருக்கும் கீழ்கண்ட அறிவுறுத்தல்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது.

1. மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைந்து 24X7 மணி நேரமும் முறைப்பணி முறையில் உதவி செயற்பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றிட வேண்டும்.

2. இதே போன்று, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவுடன் இணைந்து 24X7 மணி நேரமும் முறைப்பணி முறையில் உதவி பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றிட வேண்டும். 3. மேலும், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 44 மின் பகிர்மான வட்டங்களில் உள்ள பொறியாளர் அலுவலகங்களிலும் 24X7 மணி நேரமும் மேற்பார்வைப் முறைப்பணி முறையில் வேண்டும்.

4. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 176 கோட்டங்களின் செயற்பொறியாளர்களின் கீழ் மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கென பிரத்யேகமாக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒரு குழுவிற்கு 15 பணியாளார்கள் வீதம், மொத்தம் 5,000 பேர் 24×7 மணி நேரமும் மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.

5. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைந்து 24X7 மணி நேரமும் பணியாற்றிட முறைப்பணி முறையில் பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றிட வேண்டும்.

6. மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் இயங்கும் நிலையில் இருப்பதையும் மற்றும் தேவைப்படும் அனைத்து தளவாடப் பொருட்களையும் இருப்பில் வைத்துக் கொள்வதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

7. ஜே.சி.பி., கிரேன்கள் உள்ளிட்ட வாகன உரிமையாளர்களின் தொலைபேசி எண்களை முன்னமே கேட்டறிந்து அவைகளின் தயார்நிலையை உறுதி செய்யப்பட வேண்டும்.

8. வாரிய வாகனங்கள் அனைத்தும் செப்பனிடப்பட்டு எரிபொருள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

9. மின்தடங்கல் ஏற்படின் முதற்கட்டமாக மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் செல்போன் டவர்கள் அனைத்திற்கும் முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

10. இது போன்ற மழைக் காலங்களில் உயர் அலுவலர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் தீயணைப்பு துறையினருடனும்
அலுவலகத்தினருடனும், எப்பொழுதும் தொடர்பில் இருக்க வேண்டும்.

11. அனைத்து அலுவலர்களும் தமது அலைபேசிகளை எந்நேரத்திலும் தொடர்புக்கொள்ளும் நிலையில் வைத்துக் கொள்ளவேண்டும் எனவும், இதனை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்.

12. சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மிகுந்த கவனத்துடனும், உரிய பாதுகாப்புடனும் செயல்பட வேண்டும்.

13. பேரிடர் காலங்களில் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் தங்குவதற்கு உரிய பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்கள் மின்தடை சம்பந்தமான புகார்களை 24 மணி நேர மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தின் தொடர்பு எண்ணான 94987 94987 வாயிலாகவும் மற்றும் அனைத்து மின்பகிர்மான வட்ட மின்தடை நீக்கம் மையம் வாயிலாகவும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், மழைக்காலங்களில் பொதுமக்கள் மின்சாதனங்களை எச்சரிக்கையுடன் கையாளுமாறும், அறுந்து கிடக்கும் மின் கம்பிகளின் அருகில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

Related Posts

Leave a Comment