அக்‌ஷய திருதியையொட்டி நகைக்கடைகளில் அலைமோதும் மக்கள் ..

by Lifestyle Editor

அக்‌ஷய திருதியை ஒட்டி நகைக்கடைகளில் இல்லத்தரசிகள் மற்றும் நகைப்பிரியர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

நாடு முழுவதும் நேற்று முதல் அட்சய திருதியை இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் மூன்றாவது நாளில் அக்ஷய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் சூரியன் மற்றும் சந்திரன் இருவரும் தங்கள் கிரகங்களில் சிறப்பாக இருப்பதால், இந்த நாளில் தொடங்கும் எதுவும் எப்போதும் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. ஆகையால் இந்நாளில் ஏராளமானோர் தங்கம் மற்றும் தங்க நகைகளை வாங்குவர். இன்றைய தினம் தங்கம் வாங்கினால், குடும்பத்தில் மேலும் செல்வம் பெருகும் என்று நம்புவதால் , ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்கிட வேண்டும் என்று பலரும் விரும்புவர்.

இதனையொட்டி நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அத்துடன் அக்‌ஷய திருதியையொட்டி இன்று காலை 6 மணி முதல் நகைக்கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்து. அதன்படியே காலை முதல் பொதுமக்கள் நகைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்த தங்கம் விலை நேற்று அக்‌ஷய திருதியையொட்டி அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்து, ஒரு சவரன் ரூ.44,848-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 60 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,605-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.

Related Posts

Leave a Comment