குளிர்பானம் விற்பனை மற்றும் தயாரிக்க முறையாக பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் – மாவட்ட ஆட்சியர்

by Lifestyle Editor

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோடைக்காலம் தற்போது தொடங்கியுள்ளதால் பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூழ், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ் குளிர்பானங்கள் மோர் உள்ளிட்ட திரவ ஆகாரங்களின் தேவை அதிகமாகும். இந்த தேவைகளை பூர்த்தி செய்ய புதுப் புது உணவு வணிகர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே கோடை கால உணவினை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வணிகர்கள் உணவு பாது காப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அதன்படி அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை பெற்ற பின்னரே உணவு வணிகம் ஆரம்பிக்க வேண்டும். பழரசம், சர்பத், கம்மங் கூழ் போன்ற திரவ ஆகாரங்களைத் தயாரிக்கப் பயன்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவும் நன்னீராகவும் இருக்கவேண்டும். மேலும் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறையின் பகுப்பாய்வுக்கூடம் அல்லது என்.ஏ.பி.எல். அங்கீகாரம் பெற்ற தனியார் பகுப்பாய்வுக் கூடங்களில் பகுப்பாய்வு செய்து அதன் அறிக்கையை வைத்திருக்க வேண்டும்.

உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் பில் வைத்திருக்க வேண்டும். திரவ ஆகாரங்களைத் தயாரித்து அதற்கேற்ற வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் கரும்பு ஜுஸ் உள்ளிட்ட அவ்வப்போது உடனடியாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் கடையை மூடும் வரை விற்பனையாகாமல் மீதமானால் அவற்றை அப்புறப்படுத்திட வேண்டும். திரவ ஆகாரங்களைத் தயாரித்து அதற்கேற்ற வெப்பநிலையில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுத்தர ஐஸ் பெட்டிகள் கழுவி சுத்தமாக இருக்கிறதா? என உறுதி செய்து ஐஸ் கட்டிகள் சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா? என்பதை உரிமையாளர் கவனிக்கவேண்டும்.

பெரிய ஐஸ் கட்டிகளை எடுத்து செல்ல வைக்கோல், சணல் பை போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. சுகாதாரமான முறையில் மூடியுடன் கூடிய குப்பை தொட்டிகளை மட்டுமே உபயோகிக்கவேண்டும். அதே போல் நுகர்வோர் கடையில் திரவ உணவுப் பொருள்களை வாங்கும் போது கடையில் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். கெட்டுபோகும் நிலையில் பொருட்கள் இருந்தால், அதனை தவிர்க்க வேண்டும். திறந்த நிலையில் உள்ள எந்த வகை திரவ ஆகாரங்களையும் நுகர்வோர் தவிர்க்க வேண்டும்.

நுகர்வோர்கள் கோடைக் காலத்தில் அதிக அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதுகாப்பான திரவ ஆகாரங்களின் பாக்கெட்டுகளில் தயாரிப்புத் தேதி, காலாவதிநாள் உள்ளிட்ட அனைத்து லேபிள் விவரங்களும் உள்ளதா? என்பதை கவனித்து வாங்கவேண்டும். நுகர்வோர் வாங்கும் திரவ உணவுப் பொருட்களின் தரத்தில் குறைபாடோ அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதார குறைபாடோ காணப்பட்டால் 94440 42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ் அப் புகார் சேவை எண்ணிற்கு புகார் அளிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment