நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023 -24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்

by Lifestyle Editor

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. 2023 – 24 ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் கூட்டம் நிறைவுபெற்றது. இந்நிலையில் 2023 -24ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியிருக்கிறது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே காகிதமில்லா தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டும் 3வது முறையாக கனிணி வாயிலாகவே பட்ஜெட் தாக்கலாகிறது.

இந்த பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில் , அதற்கான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் சிறு, குறு தொழிலாளார்களுக்கு சலுகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன. பட்ஜெட் உரையை வாசிக்க நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சுமார் 2 மணி நேரம் எடுத்துக்கொள்வார் என தெரிகிறது. அதன்பிறகு சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும், சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.

Related Posts

Leave a Comment