கள்ளக்குறிச்சி அருகே கோர விபத்து.. 2 பேர் பலி..

by Lifestyle Editor

கள்ளக்குறிச்சி அருகே உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் லாரி மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் இன்று அதிகாலை டாரஸ் லாரி ஒன்று மாடுகளை ஏற்றிக்கொண்டு, கேரள மாநிலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னார் சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதிவேகமாக சென்ற அந்த பேருந்து, லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனியார் சொகுசுப் பேருந்து பயணித்த சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஆண்டனி தாசன் (58) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு கமலாபாய் (64) ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் தனியார் சொகுசு பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் . இதை போல் உயிரிழந்த பெண் உட்பட இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து சென்னை திருச்சி நான்கு வழி சாலையில் நடைபெற்றதால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் உளுந்தூர்பேட்டை போலீசார் என 3 பிரிவு போலீசாரும் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

Leave a Comment