மார்கழி மாதம்: திருப்பாவை-23, திருப்பள்ளியெழுச்சி பாடல் -03

by Lifestyle Editor

ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும்.

திருப்பாவை பாடல் – 23

மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து

வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி

மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு

போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்

கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய

சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த

காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பொருள்:

மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.

திருப்பள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருந்தபோது, விடியற்காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகத் திருப்பள்ளியெழுச்சி என்னும் இதனை அருளிச் செய்தார். திருப்பள்ளியெழுச்சி 10 பாடல்கள் கொண்ட பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… திருப்பள்ளியெழுச்சி என்பது, ‘சுப்ரபாதம்’ என வடமொழியில் வழங்கும். வைகறையில்-அதிகாலைப் பொழுதில்- இருள்நீங்க ஒளி எழுவதுபோல, ஆன்மாக்களுடைய திரோதானமலம் அகல ஞானவொளி வெளிப்படுகின்ற முறைமையை இப்பாடல்கள் குறிக்கின்றன. மேலும், இது நம்முள் உறங்கும் இறைவனைத் துயில் எழுப்புவதுமாம்.

திருப்பள்ளியெழுச்சி பாடல் : 3

கூவின பூங்குயில் கூவின கோழி

குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்

ஓவின தாரகைகளி ஒளி உதயத்து

ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்

தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!

யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பொருள்:

திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவபெருமானே! உதயத்தை அறிவிக்க குயில்களும், கோழிகளும் கூவிவிட்டன. குருகுப் பறவைகளும் கிரீச்சீடுகின்றன. சங்குகள் முழங்கும் ஒலி கேட்கிறது. நட்சத்திரங்கள் சூரிய ஒளியில் கலந்து அதனுடன் ஒன்றிவிட்டது போல, நானும் மனதில் உன்னை மட்டுமே காண வேண்டும் என்ற விருப்பத்தை நிரப்பி வந்துள்ளேன். எனக்கு நீ உன் திருவடியைக் காட்டு. தேவர்களாலும் பிறராலும் அறிய முடியாதவனே! எனக்கு எளிமையாகக் காட்சி தருபவனே! எம்பெருமானே! உறக்கம் நீங்கி எழுவாயாக.

Related Posts

Leave a Comment