மழைக்காலப் பாதிப்பிற்கு உரிய இழப்பீட்டுத் தொகை – அரசுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை ..

by Lifestyle Editor

தமிழக அரசு, மழைக்காலப் பாதிப்பிற்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க, யூரியா தட்டுப்பாட்டைப் போக்க, தேங்காயை, கடலையை கொள்முதல் செய்ய உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று ஜிகே வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுக்குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு, மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், வறட்சியான பகுதிகளில் கருகும் நிலையில் உள்ள பயிர்களுக்கும் ஏற்ப, விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை காலத்தே வழங்க, கணக்கீட்டை விரைந்து முடிக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

டெல்டா உள்ளிட்ட பல மாவட்டப் பகுதிகளில் பயிரிடப்பட்ட பயிர்கள் மழையால் சேதமுற்றதாலும், சில பகுதிகளில் ஆறு, ஏரி, குளங்களை நம்பி பயிரிடப்பட்ட பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாமல் கருகுவதாலும் விவசாயிகள் பெருத்த நஷ்டத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள். எனவே அரசு, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். மேலும் நெல் சாகுபடிக்கு தற்சமயம் யூரியா உரம் தெளிக்கும் சூழ்நிலையில் சில இடங்களில் உரத்தட்டுப்பாடு இருப்பதால் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். எனவே விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரம் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொள்ளாச்சி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஈரோடு போன்ற மாவட்டங்களில் தென்னை விவசாயிகள் பல லட்சம் பேர் விவசாயம் செய்து வருகின்றனர். ஒரு குவிண்டால் தேங்காய் 37 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 23 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை குறைவுக்கு காரணம் இடைத்தரகர்களின் தலையீடு. இந்நிலையில் அரசே, தேங்காயை நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் அல்லது தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற வறட்சியான மாவட்டப் பகுதிகளில் மானாவாரி பயிராக நிலக்கடலை பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்படுகிறது. விவசாயிகள் கடலையை அறுவடை செய்து, கடலைப் பருப்பாக விற்பனைக்கு கொண்டு வரும் ஆரம்பக் கட்டத்தில் உரிய விலை பெறுகிறார்கள்.

ஆனால் ஒரு சில வாரங்களுக்கு பிறகு இடைத்தரகர்கள், தனியார் ஆகியோரின் குறுக்கீட்டால் கடலைப் பருப்புக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் அரசே, கடலையை நேரடி கொள்முதல் செய்யவோ அல்லது கடலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யவோ முன்வர வேண்டும். எனவே தமிழக அரசு, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நியாயமான எதிர்பார்ப்பை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment