பழம்பெரும் நடிகை காலமானார்.. முதல்வர் , குடியரசுத் தலைவர் இரங்கல்..

by Lifestyle Editor

பழம்பெரும் நடிகை ஜரானா தாஸ் மறைவுக்கு குடியரசுத் தலைவர் , முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஒடிசாவில் பழம்பெரும் திரைப்பட நடிகை ஜரானா தாஸ் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். ஒடிசாவின் கட்டாக்கில் வசித்து வந்த ஜரானா தாஸ், கடந்த சில காலமாகவே , உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் சிறு வயது முதலே திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது நடிப்பில் ஸ்ரீ ஜெகந்நாத், நாரி, அடின மேகா, அமடா பட்டா உட்பட பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றவை.

இவர் தனது சிறந்த நடிப்பிறகாக பல்வேறு மாநில, மத்திய அரசு விருதுகளை பெற்றுள்ளார். குறிப்பாக ஒடியா திரைத்துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருதான ஜெயதேவ் புரஸ்கார் விருதையும் பெற்றிருக்கிறார். ஜரானா, முதலில் கட்டாக் வானொலி நிலையத்தில் அறிவிப்பாளராகவும், துார்தர்ஷனில் துணை இயக்குனராகவும் பணிபுரிந்தவர். ஒடிசா முன்னாள் முதல்வர் ஹரேகிருஷ்ண மஹ்தாப் குறித்து இவர் எடுத்த ஆவணப்படம், பலரது பாராட்டைப் பெற்றது.

இந்நிலையில் ஜரானா மறைவுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜரானாவின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் எனவும் ஒடிசா முதல்வர் தெரிவித்துள்ளார். ஜனாராவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ஒடிசா திரையுலகம், ரசிகர்கள், நண்பர்கள் , உறவினர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எனப் பலரும் ஜரானாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.

Related Posts

Leave a Comment