டிஎஸ்பி திரைவிமர்சனம் ..

by Lifestyle Editor

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள திரைப்படம் டிஎஸ்பி. சேதுபதி, செக்க சிவந்த வானம் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இப்படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இதுவே இப்படத்தின் எதிர்பார்ப்புக்கு மிகமுக்கியமான காரணமாக அமைத்துள்ளது. விஜய் சேதுபதி – பொன்ராம் கூட்டணியில் உருவாகியுள்ள முதல் படம் என்பதாலும் டிஎஸ்பி எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தார்கள். இப்படி பல தரப்பு எதிர்பார்ப்பை கொண்டிருந்த டிஸ்பி திரைப்படம் முழுமையாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்..

கதைக்களம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பூ வியாபாரியின் மகனாகவும், துடிப்பான இளைஞராகவும் வலம் வருகிறார் விஜய் சேதுபதி { வாஸ்கோ ட காமா }.சேர்ந்தால் அரசாங்க உத்யோகத்தில் மட்டுமே சேரவேண்டும் என்று கூறும் தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற பல முயற்சிகளை மேற்கொள்கிறார் விஜய் சேதுபதி.

இதற்கு இடையில் கதாநாயகி அணு க்ரீத்தியுடன் { அன்னபூரணி } காதலில் விழுகிறார். இப்படி ஒரு பக்கம் வேலை மறுபக்கம் காதல் என்று சுற்றி திரிகிறார் விஜய் சேதுபதி. இந்த சமயத்தில் விஜய் சேதுபதியின் தங்கைக்கு திருமணம் நடக்கிறது.

தனது நண்பன் தங்கையின் திருமணத்திற்காக திண்டுக்கல்லுக்கு விஜய் சேதுபதியின் நண்பர்கள் வருகிறார்கள். திண்டுக்கல்லில் வந்து இறங்கியவுடன் விஜய் சேதுபதியின் நண்பர்களுக்கும் வில்லன் முட்டை ரவிக்கும் மோதல் ஏற்படுகிறது.

இந்த சண்டையில் தனது நண்பர்களை காப்பாற்ற வரும் விஜய் சேதுபதி வில்லன் முட்டை ரவியை மார்க்கெட்டில் அனைவரின் முன்னிலையில் அடித்து விடுகிறார். இதனால் விஜய் சேதுபதியை கொன்றே தீருவேன் என்று முடிவெடுக்கிறார் முட்டை ரவி.

இப்படியொரு சூழ்நிலையில் தனது தங்கையின் திருமணத்தை கூட பார்க்கமுடியாமல் மறைந்து வாழ்கிறார் விஜய் சேதுபதி எப்படி டிஎஸ்பி ஆனார்? டிஎஸ்பி ஆன பின் முட்டை ரவிக்கும் விஜய் சேதுபதிக்கு இடையே என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை..

படத்தை பற்றிய அலசல்

எதார்த்தமான நடிப்பு மக்களை கவரும் உடல் மொழி என பக்கா கமெர்ஷியல் ஹீரோவாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. டிஎஸ்பி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ள அணு கீர்த்தியின் நடிப்பு பெரிதாக கவனம் பெறவில்லை.

நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள புகழ் வழக்கம் போல் இல்லாமல் இப்படத்தில் அதிகமான காட்சிகளில் நடித்துள்ளார். இருந்தாலும் ஒருசில இடங்களில் மட்டுமே காமெடி ஒர்கவுட் ஆகியுள்ளது. வில்லனாக வரும் பிரபாகரின் நடிப்பு விஜய் சேதுபதிக்கு இணையாக உள்ளது.

விஜய் சேதுபதியின் தந்தையாக நடித்துள்ள இளவரசின் நடிப்பு எதார்த்தம். சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள விமல் உட்பட அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்துள்ளனர்.

எதிர்பார்ப்புக்குரிய இயக்குனர்களில் ஒருவரான பொன்ராம் இம்முறை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். திரைக்கதை வேகமாக இருந்தாலும், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பம்சம் இல்லை. நகைச்சுவையும் எதிர்பார்த்த அளவிற்கு ஒர்கவுட் ஆகவில்லை. தமிழ் சினிமாவில் மாறாத பழிவாங்கும் கதைக்களத்தை விறுவிறுப்பில்லாமல் முழுக்கமுழுக்க கமெர்ஷியலாக எடுத்துள்ளார் பொன்ராம்.

காவல் நிலையத்தில் உயர் அதிகாரியான விஜய் சேதுபதி சரக்கு அடிப்பதுபோல் உள்ள காட்சி, போலீஸ் மீதுள்ள மக்களின் பார்வையை மேலும் தவறாக மாற்றுவது போல் அமைந்துள்ளது. டி. இமானின் பாடல்கள் ஓகே. பின்னணி இசை மிரட்டுகிறது. இதுவே இப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆகும். அதற்க்கு இசையமைப்பாளர் டி. இமானுக்கு தனி பாராட்டு. ஒளிப்பதிவு கலர்ஃபுல். எடிட்டிங் ஓகே.

பிளஸ் பாயிண்ட்

விஜய் சேதுபதி நடிப்பு

வில்லன் பிரபாகர்

டி. இமானின் பின்னணி இசை

மைனஸ் பாயிண்ட்

திரைக்கதை வேகமாக இருந்தாலும், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பம்சம் இல்லை

நகைச்சுவை எதிர்பார்த்த அளவிற்கு ஒர்கவுட் ஆகவில்லை

தமிழ் சினிமாவில் மாறாத பழிவாங்கும் கதைக்களம்

பொன்ராம் இயக்கம்

மொத்தத்தில் எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளார் டிஎஸ்பி

Related Posts

Leave a Comment