திருவண்ணாமலை மாவட்டத்திற்கு டிசம்பர் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை ..

by Lifestyle Editor

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு டிசம்பர் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், உலக பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு ஒவ்வொறு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவினை காண தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த திருவிழா எளிமையான முறையில் நடைபெற்றது. சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் ஆகியவை கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது. இந்நிலையில் இந்தாண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன் தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 63 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில் அதிகாலை கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீப நிகழ்ச்சி வருகிற 6-ந் தேதி நடைபெறவுள்ளது. விடியற்காலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதனையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகிற டிசம்பர் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு டிசம்பர் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் .

Related Posts

Leave a Comment