கார்த்திகை மாதத்தின் சிறப்புகள்!

by Lifestyle Editor

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்புகளை கொண்டது. அதிலும் கார்த்திகை மாதமானது பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. சுப முகூர்த்தங்கள் நிறைந்த மாதம் கார்த்திகை மாதம். கார்த்திகை மாதங்களில் பல விரதங்கள் அனுஷ்டிக்கப்படுவது உண்டு. காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது. கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

கார்த்திகை மாத விரதங்கள்:

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், விநாயகர் சஷ்டி விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, துளசி கல்யாணம், ப்ரமோதினி ஏகாதசி, ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

1. கார்த்திகை மாதத்தில் அதிக அளவில் திருமணம் நடைபெறுவதால், ‘திருமண மாதம்’ என்றும் சிறப்பிக்கப்படுகிறது. இதுதவிர பல சுபகாரியங்களும் கார்த்திகை மாதத்தில் அதிகளவு கொண்டாடப்படுகின்றது. இம்மாதத்தில் விருட்சிக ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் தான் திருமணம் செய்வதற்கு உகந்த நாளென்று புகழப்படுகின்றது.

2. மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதிப் பிழம்பாய், சிவபெருமான் காட்சி அளித்த மாதம் இம்மாதமாகும்.

3. முருகப்பெருமானை நினைத்து, கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

4. கார்த்திகை மாதம் பஞ்சமி தினமானது நாக தோஷ நிவர்த்தி செய்ய உகந்த நாளாகும். தோஷங்களை நீக்கும் மாதம் என்றும் போற்றப்படுகிறது.

5. கார்த்திகை மாத பௌர்ணமியோடு கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் இந்த திருக்கார்த்திகை திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனை தீபத் திருநாள் என்றும் அழைப்பர்.

6. முருகப்பெருமானை வளர்த்த, கார்த்திகைப் பெண்களின் நினைவாகவும் இந்தத் திருநாள் வழிபாட்டுக்குரியதாகிறது. இந்நாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம்.

7. கார்த்திகை நட்சத்திரம் அன்று அனைத்து முருகன் கோவில்களிலும் விசேஷமான வழிபாடுகளும் அன்னதானமும் நடைபெறும். அதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தீராத நோய் எல்லாம் தீரும் என்பது ஐதீகம்.

8. பிறவியில் செய்த பாவங்களை நீக்கும் சிறந்த மாதம்

பௌர்ணமி வெள்ளிக்கிழமை நாளன்று பௌர்ணமி வருவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இன்னால் பெருமானை வணங்கினால் முற்பிறவியில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும்

9. துவாதசி துளசி வழிபாட்டிற்கு சிறந்த தினம். இந்தநாளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், நல்ல பலன் கிடைக்கும். கார்த்திகை மாத துவாதசி நாளில், மகாவிஷ்ணு துளசி தேவியை திருமணம் செய்துகொண்டார் என்பது ஐதீகம். எனவே கார்த்திகை மாதம் முழுவதும், துளசியால் மகாவிஷ்ணுவை பூயை செய்து வழிபட்டால் நிறைவான வாழ்வை தருவார்.

10. கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்மஹத்தி தோஷங்களிலிருந்து விடுபடுவார்கள்.

11.கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு வாரங்கள் கடைப்பிடித்தால் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி சிவசக்தியின் அருள் கிடைக்கும்.

12. கார்த்திகை மாதத்தில் வரும் சோவார விரதம் இருப்பது சிவ பெருமானின் அருளை முழுவதுமாக பெற்றுத் தரும்.

13. கார்த்திகை மாதத்தில் தான் சிவனுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படும். இந்த சங்காபிஷேகத்திற்கும், மற்ற அபிஷேகங்களுக்கும் உரிய பொருட்களை வாங்கிக் கொடுத்தால் அசுவமேத யாகம் செய்த பலன் நமக்கு கிடைக்கும்.

14.கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் ஆன முருகப் பெருமானையும், ஹரிஹர சுதனான ஐயப்பனையும் மாலை அணிந்து, விரதமிருந்து வழிபடலாம்.

15. கார்த்திகை மாதம் தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்ற தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.

16. கார்த்திகை பவுர்ணமி அன்று கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.

17. திருவண்ணாமலையை கார்த்திகைப் பவுர்ணமி அன்று தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வலம் வந்திருக்கிறார்கள். இந்திரன், வருணன், வாயு, குபேரன், யமன் ஆகியோரும் வலம் வந்திருக்கிறார்கள். மகா விஷ்ணு மகா லட்சுமியுடன் வலம் வந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

18. கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாகப் புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும். அப்படி துளசி கல்யாணம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

Related Posts

Leave a Comment