தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

by Lifestyle Editor

தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்ய கூடும். நீலகிரி, திண்டுக்கல் ,தேனி ,திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ,ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர் ,விழுப்புரம் ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, திருவள்ளூர், கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி ,கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை கன்னியாகுமரி ,நீலகிரி ,தேனி ,திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் , ஈரோடு, திருப்பத்தூர் ,வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ,விழுப்புரம் ,செங்கல்பட்டு, கோயம்புத்தூர், சேலம் ,தர்மபுரி ,கடலூர், அரியலூர் ,பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

வருகிற 16-ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ,தருமபுரி ,சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர் ,தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

17-ஆம் தேதி மற்றும் 18 ஆம் தேதிகளில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது . சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய அந்தமான் கடற்பகுதியில் நிலவுகிறது. இதனால் இன்று மற்றும் நாளை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதி ,தெற்கு அந்தமான் பகுதி, கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் , இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வருகிற 16 மற்றும் 17ம் தேதிகளில் மத்திய வங்கக் கடல் பகுதி ,வட கடலோர பகுதி மகாராஷ்டிர கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 18ஆம் தேதி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment