அவர் கூட ஒரு சீன் நடிக்கணும்னாலும் எனக்கு ஓகே..சிவகார்த்திகேயன்

by Lifestyle Editor

சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் தான் “அயலான்”. 4500க்கும் மேற்பட்ட “விசுவல் எபெக்ட்ஸ்” காட்சிகள் இந்த திரைப்படத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதுவே இந்த திரைப்படம் உருவாக இத்தனை காலம் எடுத்துக் கொண்டதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

7 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தொழில்நுட்பத்தை கணக்கில் கொண்டு இந்த திரைப்படம் தொடர்ச்சியாக தள்ளிப்போனது. இறுதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் மீண்டும் உருவாக துவங்க, இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பார் என்றும், பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா இந்த திரைப்படத்திற்கான ஒளிப்பதிவு பணிகளை கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

ரவிக்குமார் இயக்கத்தில் தற்பொழுது உருவாகியுள்ள “அயலான்” திரைப்படம், எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த சூழலில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய தயாரிப்பில் தனது 21வது படப் பணிகளை முடித்துள்ள சிவகார்த்திகேயன், தனது அயலான் பட ப்ரமோஷன் பணிகளை தற்பொழுது துவங்கியுள்ளார்.

இந்த ப்ரோமோஷன் பணியில் இருந்த பொழுது ஒரு தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்த சிவகார்த்திகேயனிடம், தலைவர் 171 திரைப்படம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு மனம் திறந்து பதில் அளித்த சிவகார்த்திகேயன் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு ஒரு ரோல் மாடல் என்பது அனைவருக்கும் தெரியும், சினிமாவைப் பற்றி பல விஷயங்கள் அவருடைய நடிப்பை பார்த்து கற்றுக்கொண்டு இன்று நடிகனாக மாறியுள்ளவன் நான். அவருடன் ஒரு சீனில் நடிக்க வேண்டும் என்றாலும் எனக்கு எந்த விதமான மறுப்பும் கிடையாது”.

அந்த வாய்ப்புக்காக நான் காத்திருக்கிறேன், ஆனால் இதுவரை லோகேஷ் கனகராஜ் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக என்னை அணுகவில்லை. செய்திகளில் வெளியாகும் தகவலை வைத்துத் தான், நான் அந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பது எனக்கே தெரியவந்தது. ஆகவே தலைவர் 171 திரைப்படத்தில் இதுவரை நான் அதிகாரப்பூர்வமாக இணையவில்லை. ஆனால் லோகேஷ் கனகராஜ் எனக்கு அழைப்பு விடுத்தால் நான் நிச்சயம் நடிப்பேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment