பக்கிங்ஹாம் அரண்மனையில் புதிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிற உலகத் தலைவர்களுடன் ப்ரெக்ஸிட் பிந்தைய முக்கிய சந்திப்பு ஒன்றை பிரித்தானிய ராணியார் நடத்துவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கார்ன்வாலில் ஜி 7 உச்சி மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக பிரித்தானிய ராணியார், இளவரசர் சார்லஸ் தம்பதி மற்றும் இளவரசர் வில்லியம் தம்பதி உள்ளிட்டவர்கள் ஒன்றிணைந்து இந்த விருந்தை சிறப்பிக்க உள்ளனர்.
எதிர்வரும் ஜூன மாதத்தில் முன்னெடுக்கப்படும் இந்த சிறப்பு விருந்தானது, பிரித்தானியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள சிறப்பான உறவை மேலும் உறுதிப்படுத்துவதற்கான நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.
கடந்த 2018-ல் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பிரித்தானியா வருகையை முன்னிட்டு, ராணியார் மட்டுமே அவரை வரவேற்று உபசரித்திருந்தார்.
குறித்த விழாவில் இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
கொரோனா பரவல் தொடங்கிய நாள் முதல் பக்கிங்ஹாம் அரண்மனையில் தங்குவதை தவிர்த்து வந்த ராணியார், ஜூன் முதல் தமது உத்தியோகபூர்வ பணிகளை துவங்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
1952 முதல் பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத், அமெரிக்காவின் அனைத்து ஜனாதிபதிகளையும் உத்தியோகபூர்வமாக சந்தித்து வருகிறார்.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பொறுப்பேற்ற பின்னர், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இளவரசர் சார்லஸ் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, ராணியாரும் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்து தகவல் அனுப்பியுள்ளார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.