படபிடிப்பு தளத்தில் நமீதா கிணற்றில் விழுந்ததால், பொதுமக்கள் காப்பாற்ற சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகை நமீதா தமிழில் பல படங்களில் கவர்ச்சியாக நடித்து புகழ் பெற்றார். பின்னர் ஒரு காலகட்டத்தில் அவருக்கு படங்கள் வாய்ப்பு குறைந்தது. இந்நிலையில் அவர் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும் பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் தனது காதலர் வீரேந்திரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்குப் போட்டார்.

தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நமீதா, பெளவ் வெளவ் என்ற படத்தை தயாரிப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.
ஆர்.எல்.ரவி, மேத்யூ ஸ்கேரியா ஆகியோர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம் அருகே உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பை பார்க்க அருகில் உள்ள கிராம மக்கள் திரண்டு நின்றனர்.

ஒரு கிணற்றின் அருகில் நமீதா நடந்து சென்றபோது, அவர் கையில் வைத்திருந்த செல்போன் கிணற்றுக்குள் தவறி விழுந்தது. உடனே பதற்றத்தில் அதை தாவிப் பிடிக்க முயன்ற நமீதா கிணற்றுக்குள் விழுந்தார். இதை பார்த்து பதறிப்போன மக்கள் நமீதாவை காப்பாற்ற கிணற்றின் அருகே ஓடினார்கள். அவர்களை படக்குழுவினர் தடுத்து நிறுத்தினர்.

அதன்பிறகு தான் அதுவும் படப்பிடிப்பு என தெரிய வந்தது. அது படத்தின் ஒரு காட்சி என்பதை மக்களுக்கு புரியவைத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இருப்பினும் பக்கத்து கிராமங்களுக்கு படப்பிடிப்பில் நமீதா கிணற்றில் தவறி விழுந்து விட்டதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.