கூடாரத்தில் தூங்குவதன் மூலம் திரட்டிய ரூ.71 லட்சம் தொகையை தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கிய சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் வசித்து வரும் மேக்ஸ் வூசி என்ற 10 வயது சிறுவன் 200 நாட்களுக்கு மேலாக தனது வீட்டிற்கு வெளியே ஒரு கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறான். இதன் மூலம் ஒரு சுகாதார நிலையத்திற்காக 75,000 டாலர்கள் ( ரூ.71 லட்சத்திற்கு) மேல் திரட்டினான்.
தனது 64 வயதான நண்பரும் அண்டை வீடருமான ரிக் என்பவர் புற்றுநோயால் இறப்பதற்கு முன்பு சிறுவன் மேக்ஸ்-க்கு ஒரு கூடாரத்தை வழங்கினார். அப்பொழுது ரிக் மேக்ஸிடம் கூடாரத்துடன் ஒரு சாகசத்தை மேற்கொள்ளும்படி கூறியிருந்தார்.
எனவே, அவர் நினைவாக ஒரு தொண்டு நிறுவனத்திற்காக பணம் திரட்டும் யோசனை சிறுவனுக்கு வந்தது. கூடாரத்தில் தூங்குவதன் மூலம் திரட்டிய 75,000 டாலர் (ரூ. 71 லட்சம்) தொகையை நார்த் டெவன் ஹாஸ்பைஸ் என்ற தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக மேக்ஸ் அளித்துள்ளான்.
அங்கு தான் ரிக் மற்றும் அவரது மனைவி சூ ஆகியோர் தங்களது இறுதி நாட்களில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனை நிர்வாகமும் மேக்ஸுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.