சில தினங்களுக்கு முன் நடந்த என்ன சொல்ல போகிறாய் (Enna Solla Pogirai) படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஸ்வின் (Ashwin Kumar Lakshmikanthan) பேசிய பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
நடிகர் அஸ்வின் குமார் கடந்த 2015-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டைவால் குருவி’ தொடர் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த தொடர் 99 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பானது. போதிய வரவேற்பு இல்லாததால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து நினைக்க தெரிந்த மனமே என்கிற தொடரில் நாயகனாக நடித்தார் அஸ்வின். அந்த தொடரும் 90 எபிசோடுகளில் மூடிவிழா கண்டது.
சின்னத்திரை செட் ஆகாததால், பெரியதிரையில் நடிக்க முயற்சி செய்த அஸ்வினுக்கு மணிரத்னத்தின் ஓ காதல் கண்மனி மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆதித்ய வர்மா போன்ற படங்களில் சிறிய வேடம் மட்டுமே கிடைத்தது. இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவரை மிகவும் பிரபலமாக்கியது. இந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ரசிகர் வட்டமும் பெரிதானது.
இந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்பும் கிடைத்தது. அதன்படி ‘என்ன சொல்ல போகிறாய்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார் அஸ்வின். இதுவரை சமூக வலைதளங்களில் அன்பையும், ஆதரவையும் பெற்று வந்த அஸ்வின், கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த என்ன சொல்ல போகிறாய் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சால் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார்.
கதை கேட்கும் போது கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கி விடுவேன், அவ்வாறு இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கி இருக்கிறேன் என அவர் பேசியதைக் கேட்டு கோலிவுட்டே கொந்தளித்தது. ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை அதற்குள் இப்படி ஒரு ஆணவப் பேச்சு தேவையா என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இவ்வளவு எதிர்ப்பு வரும் என்பதை சற்றும் எதிர்பார்க்காத அஸ்வின், தற்போது இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: என்னுடைய முதல் படம் இது. ரசிகர்கள் கூட்டத்தை பார்த்ததும் எமோஷனல் ஆயிட்டேன். அதனால் ஏற்பட்ட பதற்றத்தால் தான் அப்படி பேசிவிட்டேன். எதையும் எழுதிவச்சிட்டு பேசுற பழக்கம் எனக்கு கிடையாது. கூட்டத்தை பார்த்ததும் என்ன பேசுறதுனே தெரியாம சில விஷயங்களை சொல்லிட்டேன். நான் பேசிய விஷயம் யாரையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னிச்சிடுங்க” என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.